Thursday, August 12, 2010

பயந்து பலியாவதைவிட...

வீதியில் நாங்கள்


பாதியில் பயணம்;


அடுக்கு மாடி குடியிருப்புகள்
அத்தனையும் அவனுக்கு;


ஒடுவதற்கு உரிமையாய்
எங்களிடம் இருப்பது
பாதை அல்ல;


பாதம் மட்டும்தான்!!






வெறிப்பிடித்த கூட்டம் ஒன்று


வீதியில் உலா வர;


சிதறி ஒடிய கூட்டதிற்குள்


குமுறல் சப்தம் காணிக்கையாய்
கயவர்களுக்கு!!






அமைதிப் பேச்சுவார்த்தை
அழகாய் நடக்கும் ஐ.நா விலே;


கதறும் சப்தம்
காதில் ஏறாது
காரணம் அவர்கள்
எல்லாம் ஏ.சி யிலே!!






கரம் சோர்ந்தாலும்


கற்கள் மட்டும் இன்னும் பிடியில்;


என் முட்டி இரண்டும்


பூமியை முத்தமிடுவதற்கு முன்


பறித்துவிட வேண்டும்
எதிரியின் ரோமத்தையாவது!!






கனலாய் கண்ணீர்த் துளிகள்


வீழ்வதற்காக அல்ல;


என் தலைமுறை வாழ்வதற்காக!!






கற்களோடு
களத்தில் நாங்கள்;


வருத்தப்பட வேண்டிய உலகமோ


வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தது;


அட்டைப்படம் ஜொலித்தது!!






வீழ்ந்த மழலைகளைச் சுற்றி


சூழ்ந்த கூட்டம்;


ஒளிரும் புகைப்படக் கருவியால்


மிளிரும் பக்கங்கள்;






கவிதைக்குக் கருவாய்


படத்திற்குக் கதையாய்


கட்டுரைக்கு உரையாய்


வரலாற்றுக்கு வலியாய்


செத்தும் சோறுப் போட
பரிதாபப் பாரினில்


பாலஸ்தீனியராக நாங்கள்;






பறித்துக் கொண்ட என் உரிமைகள


பற்றிப் பிடித்துக் கொள்ள நான் கேட்டால்
அழைப்பிதழ் இல்லாமலே
அழகாய் பெயர் சூட்டும் உலகம்


தீவிரவாதி என்று!!






இனி


வரும் தலைமுறைக்கு
உரமாய் என் உதிரம்


பயந்து பலியாவதைவிட


பாய்ந்து புலியாவதே மேல்!!

No comments: